Wednesday 9 March 2011

ஆயுர்வேத மருத்துவ முறை


ஒவ்வொரு மருத்துவ முறைகளிலும் உள்ள தனித்துவம், அந்தந்த முறைகளில் பயன்படுத்தப்படும் மருந்துகளாகும்.

ஆயுர்வேதம் மிக பழமையானது. வேதங்களுக்கு இணையாக மதிக்கப்பட்டு வரும் ஆயுர்வேதம், நோய் நொடி இன்றி ஆரோக்கியத்துடன் நீண்ட கால வாழ வழிகாட்டும் ஒரு அருமையான சிகிச்சை முறை.

 அலோபதி முறையில் உள்ள மாத்திரைகள், கேப்ஸ§ல்கள், இன்ஜெக்ஷன், சிரப் போலவே ஆயுர்வேதத்திலும் பல வகைகளாக மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றை இங்கு பார்ப்போம்

1) அர்க்கங்கள்          2) ஆஸவங்கள்        3) அரிஷ்டம்       4)  சூரணங்கள்

5) மாத்திரைகள்       6)லேஹியங்கள்     7) பானகம்            8)க்ருதம்

1) அர்க்கங்கள்
திரவப் பொருட்களுடன் மருந்து சரக்குகள் கொதிக்கும் போது எழும் நீராவி பல மருத்துவ குணங்கள் உடையது. மூலப்பொருட்களில் உள்ள சில குறைகள் (துர்வாசனை போன்ற) இந்த முறையில் நீக்கப்படுகிறது. நீராவியை குளிர வைத்து நீராக்குவதால் மருந்துகள் உட்கொள்வது சுலபமாகிறது. சாதாரணமாக கொதிக்க வைக்கும் போது நஷ்டமாகும் சில சத்துக்களை, அர்க்க முறையால் நஷ்டமாகாமல் தடுக்கலாம். தவிர பல மருந்து சரக்குகளை திரவ ரூபத்தில் வடித்து பல நாட்கள் சேமித்து வைக்கவும் இந்த முறை உதவுகிறது.

2) ஆஸவங்கள்
காலபோக்கினாலும் கெட்டு விடும் மருந்து சரக்குகளின் சக்தியை, எப்பொழுதும் கிடைக்குமாறு பாதுகாக்கப்படுகிறது. மருந்து சரக்குகளுடன் வெல்லம், சர்க்கரை, தேன் போன்ற இனிப்புப் பொருட்களையும் சேர்த்து, மண் பாண்டங்களில் வைத்து “சீல்” செய்யப்படுகின்றன. இந்த மண் பாண்டங்களை குறிப்பிட்ட காலம் வரை அப்படியே வைக்கப்படும்.இதனால் மருந்துப்பொருட்கள் புளித்து, நுரைத்து பொங்கும் காடியாகும்.முடிந்தவுடன் மண் கலங்கள் திறக்கப்பட்டு, அவற்றில் மேலே நிற்கும் திரவம் எடுக்கப்பட்டு வடிகட்டி வைக்கப்படும். அடியில் தேங்கிய வண்டல் தவிர்க்கப்படுகிறது. வடிகட்டி வைக்கப்பட்ட திரவம் தெளிந்தவுடன், அதை பாட்டில்களில் அடைத்து வைக்கப்படுகின்றன.

3) அரிஷ்டம்
 அரிஷ்டங்கள் பெரும்பாலும் கஷாயங்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது. மருந்து சரக்குகளை அப்படியே அல்லது ஒன்றிரண்டாக பொடித்து கஷாயமாக காய்ச்சி உபயோகிப்பது தான் இம் முறைக்கும் ஆஸ்வ முறைக்குமுள்ள வித்தியாசம்.

4) சூரணங்கள்
சூரணங்கள் – மருந்து சரக்குகளை நன்றாக இடித்து, பொடியாக்கி, சலித்த நிலையில் தயார் செய்யும் மருந்து சூரணம் எனப்படுகிறது. சூரணங்கள் இரு வகைப்படும் .

A ) நன்றாக பொடித்து பெரும்பாலும் அப்படியே பயன்படுத்தப்படும் சூரணம் முதல் வகை. இதை பொதுவாக சூரணம் என்றே குறிப்பிடப்படுகிறது.

B ) இரண்டாவது வகை சூரணம் “க்வாத சூரணம்” என்று அழைக்கப்படுகிறது.
க்வாத சூரண வகையில் சில வற்றை கஷாயமாக செய்து உட்கொள்ள வேண்டியிருக்கும். வாய்கொப்பளித்தல், புண்களை கழுவுதல், குளித்தல் போன்ற வெளி உபயோகங்களுக்கு க்வாத சூரணம் பயன்படும். கஷாயமாக செய்யப்படும் போது, பெரும்பாலும் ஒரு பங்கு க்வாத சூரணத்திற்கு 16 பங்கு தண்ணீர் சேர்த்து காய்ச்சி, எட்டில் ஒன்றாக குறுக்கி வடிகட்டி கஷாயம் தயாரிக்கப்படுகிறது.

5) மாத்திரைகள்
மாத்திரைகள் – மருந்துகளை மாத்திரைகளாக எடுத்துக் கொள்வது சுலபமானது. இதற்கு மருந்துப் பொருட்களை ஒன்றிரண்டாக (ரவை போல்) உடைத்துக் கொள்ள வேண்டும். மிகவும் “நைசாக” பொடித்தால் மாத்திரைகள் சரியாக உருவாகாது. துகள்கள் ஒட்டிக் கொள்ள பெரும்பாலும் வேலம் பிசின் உபயோகிக்கப்படுகிறது. இயந்திரங்கள் மூலம் மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன.

6) பானகம்
இது கலவையின் நீர்ப்பகுதியை குறுக்கி “பாகு” போல் தடிக்கச் செய்து தயாரிக்கும் முறை. லேஹியங்கள், வடகங்கள், இவற்றுக்கு பொதுவானது. கற்கண்டு, சர்க்கரை, வெல்லம், பனைவெல்லம் போன்றவற்றுடன் தண்ணீர் அல்லது கஷாயம் கலந்து, நன்கு கரைத்து, வடிகட்டி, கொதிக்க வைத்து, குறிப்பிட்ட அளவு கலவை கெட்டியானவுடன் அதில் நெய், பொடித்து சலித்த பொடிகளை சேர்த்து கலந்து, ஆறியவுடன் தேன் சேர்த்து லேஹியங்கள் தயாரிக்கப்படுகின்றன.

7) லேஹியங்கள்
ஆயுர்வேத மருந்துகளில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் மருந்து “லேஹியம்”. லேஹியங்கள் நோய்களை குணப்படுத்துவது மட்டுமின்றி, நோயாளியின் உடல் தேறவும், பழைய பலத்தை அடையவும் உதவுகின்றன. லேஹிய தயாரிப்புக்கு ஆதாரமாக இருப்பது மேலே சொன்ன பானக பாகுபதமாகும். பாகுடன் நெய், பால், தேன், மருந்து சரக்குகள், இவற்றை சேர்த்து சேர்த்து பக்குவப்படுத்தி லேஹியமாக்குவார்கள்.

8) க்ருதம்
நெய்யும் தைலமும் இதர மருந்துப் பொருட்களுடன் சேர்ந்து வியாதிகளை கண்டிக்க பக்குவப்டுத்தப்படுகின்றன. இந்த விதமாக இவற்றை பக்குவப்படுத்த கல்கம், திரவம், ஸ்நேஹம் என்ற மூன்றும் அத்தியாவசியமாகின்றன.

கல்கம் – தேவையான மருந்துகள் நன்கு விழுதாக அரைக்கப்பட்டு எண்ணையுடன் கலக்கப்படுகின்றன. இந்த பசை போன்ற பொருளே, ‘கல்கம்’ எனப்படும்.

திரவம் – கல்கத்துடன் கஷாயம், சாறு, தண்ணீர், பால் தயிர், மாமிச ரஸம்,முதலியன கலக்கப்படுகின்றன. இந்த கலவைக்கு திரவம் என்று பெயர்.

ஸ்நேஹம் – நெய், எண்ணை, கொழுப்பு, எலும்பில் உள்ள ஜவ்வு போன்ற மஜ்ஜை ஆகியவை ஸ்நேஹம் என்று கூறப்படுகின்றன.

கல்கம், திரவம், ஸ்நேஹம் ஒன்று சேர்த்து காய்ச்சி, நீர்வற்றியவுடன் இறக்கி, வடிகட்டி “க்ருதம்” “தைலம்” முதலியன தயாரிக்கப்படுகின்றன.

மேற்சொன்னவை தவிர இன்னும் பல முறைகளில் ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

No comments:

Post a Comment